கே. பாக்யராஜ் நடித்த கடைசி படத்தின் கடைசி காட்சியை வெளியிட்ட ‘கன்னடத்து பைங்கிளி’ படக்குழு
கே. பாக்யராஜ், டி. ராஜேந்தரை முதல் முறையாக இணைத்த இயக்குநர் சாய் ரமணி
‘கன்னடத்து பைங்கிளி’ படக்குழுவினர் கே. பாக்யராஜுக்கு செலுத்திய இதயப்பூர்வ அஞ்சலி.
சாய் ரமணி இயக்கும் ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படத்தில் கே. பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, டி. ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். பாக்யராஜும், டி. ராஜேந்தரும் இணைந்து பணியாற்றிய முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் நடித்த கடைசி படமாகவும் எம்.பி.எம். எண்டர்டெயின்மென்ட் (MBM Entertainment) நிறுவனத்தின் சார்பில் இந்துமதி கோபி தயாரிக்கும் ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படம் அமைந்துள்ளது. இப்படத்தை ‘சிங்கம் புலி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஆகிய படங்களை இயக்கிய சாய் ரமணி எழுதி இயக்கியுள்ளார்.
இது குறித்து பேசிய இயக்குநர் சாய் ரமணி, “பாக்யராஜ் சாரின் திடீர் மறைவு எங்களை கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
படப்பிடிப்பின் கடைசி நாளன்று பாக்யராஜ் சார் மற்றும் டி. ராஜேந்தர் சாரை வைத்து படத்தின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், அன்றைய தினத்தில் பாக்யராஜ் சாருக்கான இரங்கல் அஞ்சலியை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது மிகவும் கவலையாக இருந்தது.
‘கன்னடத்து பைங்கிளி’ படத்தில் தனது பகுதிகள் அனைத்தையும் பாக்யராஜ் சார் சிறப்பாக முடித்துக் கொடுத்தார். இப்படத்தை நன்றாகப் புரொமோட் செய்ய வேண்டும் என்றும் அவர் விரும்பினார். இன்னும் சில க்ளோஸ்-அப் காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டிய நிலையில் அவர் நம்மை விட்டு சென்றுவிட்டார். எனவே, அந்தக் காட்சிகளை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்க உள்ளோம்.
சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து நடித்த படமும் இதுதான். அதுவும் கணவன்-மனைவியாகவே நடித்துள்ளனர்.
பாக்யராஜ் சாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக அவர் நடித்த கடைசி காட்சியை வெளியிட்டுள்ளோம். காதல் மற்றும் நகைச்சுவை நிறைந்த இப்படத்தில் நாயகனின் தந்தையாக முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுவதும் பாக்யராஜ் சார் இடம்பெறுவார்” என்றார்.
இப்படத்தில் புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். சிங்கம் புலி, புகழ், ஆதவன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கூமாபட்டி தங்கபாண்டி, ஆட்டோக்காரன் தீபக், இடியாப்பம் சிவா உள்ளிட்ட ஐந்து பிரபல யூடியூபர்கள் இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகின்றனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த மேலும் சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘பேராண்மை’, ‘மீகாமன்’, ‘வாகா’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ். ஆர். சதீஷ் குமார், ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாடு–கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓசூரில் 1990-களில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது என இயக்குநர் சாய் ரமணி தெரிவித்துள்ளார்.
