“வள்ளியம்மா பேராண்டி” பாடல் வெளியீட்டு விழா !!

தெருக்குரல் அறிவின் புதிய இசை ஆல்பம் “வள்ளியம்மா பேராண்டி” பாடல் வெளியீட்டு விழா !!

தெருக்குரல் அறிவு எழுதி, மெட்டமைத்து, இசை வடிவமைத்து, சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய இசை ஆல்பம் “வள்ளியம்மா பேராண்டி”. இசை உலகில் கோலோச்சும் முன்னணி நிறுவனமான சோனி மியூசிக் (Sony Music) நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது. இந்த ஆல்பம் பாடல் வெளியீடு விழா, திரைப்பிரபலங்களுடன் ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

IAS சிவகாமி பேசியதாவது…
அன்பு சகோதரர் அறிவுக்கு என் வாழ்த்துக்கள். அறிவுக்கும் என் குடும்பத்திற்கும் மிக நெருங்கிய உறவு உள்ளது. ஒரு முறை கேஜி குணசேகரனை என் ஊரிற்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது என் அம்மா அவர் பாடல் கேட்டு அழுது விட்டார், அத்தனை உணர்வு மிக்கதாக அவர் பாடல் இருந்தது. அதே போல் இப்போது அறிவு இருக்கிறார். அவரே பாடல் எழுதி, நடனமாடி, மெட்டமைத்துப் பாடி உலகமெங்கும் கொண்டு செல்கிறார். இவர் சுயம்புவாக வளர்ந்திருக்கிறார். இவரைப்போல் எத்தனை பேரால் கமர்ஷியல் ஆல்பம் கொண்டு வர முடியும். மிகச்சிறப்பான ஆல்பத்தின் மூலம் உணர்வுகளில் மாற்றம் கொண்டு வர முடியுமென்று சொன்னால், அறிவின் பாடலை அதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். அவருக்கும் குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள். அறிவு தனது சமுதாயத்திற்காக மட்டுமல்லாமல், மாற்றம் வர வேண்டுமென்று பாடுகிறார். அறிவின் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

பாடகர் ஆண்டனி தாசன் பேசியதாவது…
என்னைப்போல் திறமையானவர்களை அறிமுகப்படுத்தும் இயக்குநர் ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. இந்த ஆல்பத்திற்கு தம்பி அறிவு என்னை அழைத்தது மகிழ்ச்சி. இந்த ஆல்பம் உங்கள் அனைவரையும் கவரும் நன்றி.

இசையமைப்பாளர் D இமான் பேசியதாவது…
தெருக்குரல் எனும் பெயரை மாற்றி, பல அடைமொழிகள் வைக்கும் அளவு அறிவு வளர்ந்துள்ளார். ஆல்பத்தின் பாடல் அத்தனை அற்புதமாக உள்ளது. பாடலை வெளியிட்ட சோனி மியூசிக் நிறுவனத்திற்கு என் நன்றிகள். ஆல்பம் வீடியோவில் அறிவு மிக நன்றாகச் செய்துள்ளார். அவர் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் கல்பனா அம்பேத்குமார் பேசியதாவது…
ஒரு உதவி இயக்குநராக இப்போது தான் பணியாற்றி முடித்தேன். என் மேல் நம்பிக்கை வைத்து என்னை இந்த ஆல்பம் வீடியோவை இயக்கச் சொன்ன அறிவிற்கு என் நன்றிகள். இந்த ஆல்பம் உங்களுக்குப் பிடித்திருக்குமென நம்புகிறோம். இது எங்களின் முதல் முயற்சி ஆதரவு தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் ஆண்ட்ரோ பேசியதாவது…
அறிவு இனிமையான நண்பர். இந்த ஆல்பம் குறித்து நிறைய உரையாடினோம். ஆங்கில வரிகள் கொண்ட பாடல்களை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நம் மண்ணின் இசையை நாம் தான் உருவாக்க வேண்டும் என்றார், அப்படித்தான் இந்த ஆல்பத்தில் இரண்டு பாடல்களை உருவாக்கியுள்ளோம். பாடலை அனைவரும் ரசிப்பீர்கள் என நம்புகிறோம் நன்றி.

தென் அமேரிக்க இசையமைப்பாளர் காச்சி பேசியதாவது…
தெருக்குரல் அறிவை இந்த பிறந்த நாளில் வாழ்த்துவது மகிழ்ச்சி. எனது தம்பியாகவே அவரை நினைக்கிறேன். நான் ஆப்பிரிக்காவிலிருந்து வந்துள்ளேன். இந்த ஆல்பம் உங்களுக்குப் பிடிக்குமென்று நம்புகிறேன். இந்த ஆல்பத்திற்கு மியூசிக் புரோடியூசராக பணியாற்றியுள்ளேன். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

கலை நேசன் பேசியதாவது…
இங்குள்ள போஸ்டர் பார்க்கும் போது என் அப்பா தான் ஞாபகம் வருகிறார். அறிவு என்னுடைய மகன் என்பதற்காக இல்லை, உண்மையிலேயே அவரின் ஒவ்வொரு பாடலுக்கும் நான் ரசிகன். அவன் பாடல்கள் எங்களின் வாழ்வைச் சொல்வது தான். அவனை இந்த நிலைக்குக் கொண்டு வந்த இயக்குநர் பா ரஞ்சித் அவர்களுக்கு என் நன்றிகள். நாங்கள் இவன் ஐஏஎஸ் அதிகாரியாக வருவான் என நினைத்தோம் ஆனால் இன்று சமூகத்திற்குத் திரும்பச் செய்யும் இடத்திற்கு அவன் வந்திருப்பது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது…
காஸ்ட்லெஸ் கலக்டிவ் செய்யும் போது தான் அறிவை முதல் முறை பார்த்தேன். கலை இலக்கியத்தை அரசியல் வடிவமாக்கி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் என் நோக்கம், அந்த வகையில் இயங்கும் அறிவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலிருந்து அவரைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். காலாவில் மிக முக்கிய பாடலை எழுதினார். பல முக்கிய பாடல்களை எழுதியிருக்கிறார். அம்பேத்கருடைய சிந்தனைகள் எனக்கும் அவனுக்குமான நெருக்கமான சிந்தனையாக, உறவாக மாறியது. அம்பேத்கரிய சிந்தனைகளை எளிய வடிவமாக்கி எப்படி சந்தைப்படுத்துவது என்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆனால் அறிவு கொண்டு செல்லும் ராப் பாடல்கள் வெற்றி பெறுவதோடு அந்த அரசியலையும் மக்களிடம் கொண்டு செல்வதை நேரில் கண்டிருக்கிறேன். அது தான் அவருக்குப் பெரிய புகழைப் பெற்றுத் தந்துள்ளது. அது எளிதில் கிடைக்காது. உலகளவில் தனி இசைக் கலைஞர்கள் மிகப்பெரிய புகழ் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அது இங்கு ஏன் நிகழவில்லை எனும் போது தான் அறிவின் பங்கு மிக முக்கியமானதாகிறது. அவர் மூலம், இப்போது பல கலைஞர்கள் வெளி வந்துள்ளனர். எஞ்ஞாயி எஞ்சாமி பாடலின் வெற்றியில் அவரது பாடல் வரிகள் மிக முக்கியமானது. ஆனால் அதன் பிரச்சனைகளில் சிக்கி வெளிவந்ததற்குப் பதிலடி தான் இந்த 12 பாடல்கள் என நினைக்கிறேன். என்னால் இசையமைக்கவும் முடியும் என நிரூபிக்கும் விதமாக இந்த பாடலை உருவாக்கியுள்ளார். அறிவு மிக உணர்வுப்பூர்வமானவர். கலையை எப்படிப் பயன்படுத்துவது என்பது தான் எங்களுக்கான உரையாடலாக இருக்கும். எப்படி இவரால் இத்தனை பாடல்கள் இசையமைத்து உருவாக்க முடிந்தது என்பது ஆச்சரியமாக உள்ளது. எனக்கு ராசாத்தி பாடல் மிகவும் பிடித்திருந்தது. சோனி நிறுவனம் மூலம் இது மக்களிடம் சென்றடையும் என நம்புகிறேன். அறிவுக்கு இது முதல் படி தான். விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அவர் இன்னும் உயரம் செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன் நன்றி.

தெருக்குரல் அறிவு பேசியதாவது…
இசைத்துறைக்கு வந்த பிறகு குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவில்லை, இன்று இங்கு அப்பா என்னைப் பற்றி பேசியது மகிழ்ச்சி. என் வளர்ச்சிக்கு முழு காரணமாய் இருக்கும் அண்ணன் பா ரஞ்சித் அவர்களுக்கு என் நன்றிகள். நான் படிக்கும் காலத்தில் நான் கேட்ட குரல் ஆண்டனி தாசன் அண்ணன் குரல் தான். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் வந்தது மகிழ்ச்சி. இண்டிபெண்டட் மியூசிக் உள்ளே நான் வரக் காரணமே காஸ்ட்லெஸ் கலக்டிவ் மூவ்மெண்ட் தான். அது எனக்கு மட்டுமல்ல, பல கலைஞர்களுக்கு அடையாளம் தந்தது அந்த காஸ்ட்லெஸ் கலக்டிவ் தான், அதை உருவாக்கிய அண்ணன் பா ரஞ்சித்துக்கு நன்றி. வள்ளியம்மா பேராண்டி என்பதில் வள்ளியம்மா வரலாறு மிக முக்கியம். பிரிட்டிஸ் காலத்தில் இங்கிருந்து இலங்கைக்கு அழைத்துச் சென்று தேயிலைத் தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு, பல கஷ்டங்களைத் தாண்டி, இங்கு மீண்டும் வந்து வாழ்வை எதிர்கொண்ட வள்ளியம்மாயின் வரலாறு மிக முக்கியம் என் அடையாளம் அது தான். பொதுவாகப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எனக்கு நம்பிக்கையே இல்லை. இங்கே என் போல் வாழ்பவர்கள் எப்போது கொல்லப்படுவார்கள் என்றே தெரியாத சூழல் நிலவுகிறது. இந்த உலகில் என்னை அடையாளத்தைப் படுத்தும் முயற்சியாகத் தான் வள்ளியம்மா பேராண்டி ஆல்பத்தை உருவாக்கினோம். இந்த குழுவில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கு என் நன்றிகள். இந்த பயணத்தில் எனக்கு முன் பயணித்த அத்தனை கலைஞர்களுக்கும் என் நன்றிகள். பல பாடல்கள் நம் ஆயாக்களிடம் இருந்து தான் வந்தது, ஆனால் அந்த அடையாளத்தை நாம் மறந்து விடுகிறோம். இந்த அடையாளத்தைத் தொலைத்துவிட்டால் நாம் வேரற்ற மரமாக வெட்டி வீழ்த்தப்படுவோம். எஞ்ஞாயி எஞ்சாமி பாடலின் போது நான் பேசியது பிரச்சனையானது. உன் ஆயா பற்றி பாடவா வந்துள்ளாய் எனக் கேட்டபோது, ஆம் என் ஆயா பற்றிப் பாடத்தான் நான் வந்துள்ளேன் என்றேன். என் மீதான கேள்விகளுக்கான பதில் தான் இந்த ஆல்பம். நாம் வாழும் இன்றைய உலகில் அன்பை மீட்டெடுப்போம் நன்றி.