பதினெட்டு கரங்கள் கொண்ட ஐயப்பன் முதல்முறையாக திரையில் தோன்றுகிறார்!

ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், கூட்டு முயற்சியில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ் திரைப்படம் ’ஸ்ரீ சபரி ஐயப்பன்’.

இத்திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளில் மிக பிரமாண்டமான முறையில் ஐம்பது லட்சம் ரூபாய் பொருட் செலவில் கிராஃபிக்ஸ் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியில் ஐயப்பன் விஸ்வரூப அவதாரமாக பதினெட்டு கரங்களில், பதினெட்டு ஆயுதங்களுடன் காட்சியளிக்கிறார்.

இத்தனை வருடங்களில் அம்மன், சிவன், விஷ்ணு, விநாயகர், முருகர், அணுமன் என இந்த கடவுள்களை மட்டுமே விஸ்வரூபமாக பார்த்த நாம், நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி உலக சினிமாவில் முதல் முறையாக 33 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் ஐயப்பன் திரைப்படத்தில் விஸ்வரூப ஐயப்பனை பார்க்க போகிறோம், என்கிறார் இயக்குனர் ராஜா தேசிங்கு!

மேலும், இந்த திரைப்படத்தில் ஐயப்பன் மட்டும் இன்றி காவல் தெய்வம் கருப்பசாமியும் விஸ்வரூபமாக காட்சி தர உள்ளார். சிலையாக இருக்கும் கருப்பசாமி சாலைகளிலும், ஆற்றிலும் நடந்து வரும் பிரம்மிக்கத்தக்க கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தில் இடம் பெற்றுள்ளது. சுமார் 20 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளதால் திரைக்கு வர சற்று கால தாமதம் ஏற்பட்டது. மிக பிரமாண்டமாக தயாராகியுள்ள இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் திரையிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இத்திரைப்படத்தில் விஜயபிரசாத், பூஜா நாகர், சோனா, கஞ்சா கருப்பு, சாம்ஸ், முத்துக்காளை, ராஜேந்திரநாத், வடிவேல் கணேஷ், உடுமலை ரவி, மங்கி ரவி, போண்டா மணி, இந்திரன், ராஜாசாமி, விஷ்வகாந்த், சுமதி, சின்னாளப்பட்டி சுகி, லதா, சுவேதா மற்றும் இயக்குநர் ராஜாதேசிங்கு ஆகியோர் நடித்துள்ளனர்.

நடனம் சஞ்சிவ் கண்ணா, சண்டை பயிற்சி சரவெடி சரவணன், இசை பாபு அரவிந்த், படத்தொகுப்பு எஸ்.பி.அகமது, ஒளிப்பதிவு மகேஷ் மகாதேவன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை, இயக்கம் என 6 முக்கிய பொறுப்புகளை இயக்குனர் ராஜாதேசிங்கு கையாண்டுள்ளார்!

செண்டை மேளம் முழங்க, ஐயப்பன் பூஜை நடத்தி, 18′ படியில் ஐயப்பனை அமர வைத்து, “ஸ்ரீ சபரி ஐயப்பன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது!

விழாவில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், பேரரசு, கே.ராஜன், தினா, எஸ்.என்.சுரேந்தர், கில்டு செயலாளர் துரைசாமி, சிறு முதலீட்டாளர்கள் சங்க தலைவர் அன்புச் செல்வன், சபரிமலை ஐயப்பா சேவா சங்கம் துரை சங்கர், பார்மட் நியூமராலஜி மகாதன் சேகர் ராஜா மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்!