ஈழத்தில் உருவாகியிருக்கும் “அந்தோனி” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம்.

ஓசை பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில், கயல் வின்சன்ட் மற்றும் TJ.பானு இணைந்து நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதம் பூஜையுடன் ஆரம்பமாகி இலங்கை – யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது டப்பிங் பணிகள் ஆரம்பித்திருப்பதாக படக்குழுவினர் அறியத்தருகின்றனர்.

அந்தோனி திரைப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு இளம் கலைஞர்கள் இணைந்து இயக்குகின்றனர். ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் கலைவளரி சக ரமணா மற்றும் சுகந்தினி ரமணதாஸ் அவர்கள் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர். திரு.இரமணன் அவர்கள் இத்திரைப்படத்தில் இணை இயக்குனராகவும் பணிபுரிகின்றார். மற்றும் இணை தயாரிப்பாளர்களாக விஜயன் பாலசிங்கம் (விஜய் பிலிம்ஸ்) , சிறீஸ்கந்தராஜா (ட்ரிம்லைன் புரடக்‌ஷன்ஸ்) ஆகியோர் இணைந்து கொண்டிருக்கின்றார்கள்.

கயல் திரைப்பட நடிகர் “கயல் வின்சன்ட்” அவர்களும், சினிமா உலகில் தனக்கென தனி இடத்தினை பிடித்து, மிக குறைந்த அளவில் சிறப்பான கதையம்சங்களை கொண்ட கதைகளை தெரிந்து நடித்து வரும் காதலிக்க நேரமில்லை, வாழ், போர், மாடர்ன் லவ், இமைகள், கதாநாயகியான T.J.பானு, நடிகர் அருள்தாஸ், குணச்சித்திர நடிகர் நிழல்கள் ரவி, மற்றும் இலங்கையை சேர்ந்த நடிகர் சுதர்சன் ரவீந்திரன், மற்றும் நடிகை செளமி, ஆண்டவன் கட்டளை அரவிந்தன், இதயராஜ், யசிதரன், தர்ஷிபிரியா, ஷாமிலா, சாந்தா, சர்மிளா, வசந்த சீலன், போன்றோரும் எமது தமிழ்நாட்டு நடிகர்கள் பலரும் இணைந்து திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் பொருட்செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கின்றார். சித்தா மற்றும் சென்னை சிற்றி கேங்ஸ்டர் போன்ற திரைப்பங்களின் படத்தொகுப்பாளர் சுரேஷ் A.பிரசாத் படத்தொகுப்பு பணியை செய்கின்றார். கலை இயக்குனராக கலா மோகன் அவர்களும், ஆடை வடிவமைப்பாளராக தரங்கனி அவர்களும், ஒப்பனை கலைவாணி மற்றும் அகல் சகி ஆகியோரும் பணியாற்றியிருக்கின்றனர்.

இலங்கையில் வெளிவந்த சினிமா திரைப்படங்களை பொறுத்தவரை ஒரு தனித்தன்மை கொண்ட எமது மண் சார்ந்த சினிமாவை எடுத்து காட்டுகின்ற திரைப்படமாக இந்த அந்தோனி அமையும் என்பதால், இத் திரைப்படம் ஐரோப்பிய அளவில் உலகத்தமிழ் மக்கள் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை உண்டுபண்ணியிருக்கின்றது என திரைப்படக்குழு அறியத்தருகின்றனர்.

தற்போது Post Production பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர், ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.