*குறை சொல்வதற்கு காட்டும் ஆர்வத்தை ஊக்கப்படுத்துவதற்கு காட்டுவதில்லை – விமலாராணி பிரிட்டோ*

*APP-கள் தான் இந்த உலகை ஆளப் போகின்றது – தயாரிப்பாளர் டாக்டர் சேவியர் பிரிட்டோ*
*நான் புறக்கணிக்கப்பட்ட வலியில் இருந்து தோன்றியவன் – திண்டுக்கல் ஐ.லியோனி*
*செல்போனை தடை செய்தால் இந்த உலகமே அப்படியே நின்றுவிடும் – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்*
”VKAN V Solution Private Limited” என்னும் மென் பொருள் நிறுவனம் 3 வயது முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான FEFDY பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு 27.04.2022 அன்று  மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உயர்திரு மனோ தங்கராஜ், சுகாதாரம், திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.ஏ.சந்திரசேகர், திரைப்பட நடிகர் திரு. தமன், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
உலகத்தரம் வாய்ந்த கற்றல், கற்பித்தல் என இரண்டிலும் மேம்பட்ட பாடத்திட்டத்தையும் கற்றல் துணைக்கருவிகளையும் FEFDY பாடத்திட்டமாக VKAN-V உருவாக்கியுள்ளது மேலும் இந்த பாடத்திட்டமானது சர்வதேச அங்கீகாரம் பெற்ற அமைப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
பொதுவான சமூக விழிப்புணர்வு, ஆங்கிலம் மற்றும் கணிதம் எனும் மூன்று பிரிவுகளின் அடிப்படையில் FEFDY பாடத்திட்டமானது உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவான சமூக விழிப்புணர்வு என்கின்ற பிரிவின் கீழ், வாழ்வியல் திறன்களை மேம்படுத்துதல், இளம் பருவத்திலேயே சமூக அக்கறை, இயற்கை மீதான நேசம் மற்றும் சுய ஆளுமைத் திறனை மேம்படுத்துதல்  தொடர்பான பாடத்திட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 
ஆங்கிலம் என்னும் பிரிவின் கீழ் ஆங்கிலத்தின் 26 எழுத்துக்கள் மற்றும் 44 ஒலிகளை சிறப்பாக கற்றுத் தேறுவதற்குத் தேவையான ஒருங்கிணைந்த உரையாடல் தன்மையுடன் கூடிய ஆர்வமூட்டக் கூடிய பாடத் திட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 
எண்ணிக்கைகள் அறிதல், வரிசைப்படுத்துதல், மற்றும் அளவிடுதல் போன்ற எண்ணியல் திறன்களை வித்தியாசமான முறையில் குழந்தைகளை ஈர்க்கக்கூடிய செயல்பாடுகளுடன் கற்பிக்க்கும் வகையில் கணித பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எட்டாயிரத்திற்கும் அதிகமான கல்வித்துணை செயல்பாடுகளின் உதவியுடன் குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 
eVok என்னும் மின்னணு புத்தகமானது காட்சி வழிக் கற்றல், செவிவழி கற்றம் மற்றும் இயங்கவியல் கற்றல் ஆகிய மூன்றுக்குமான இடைவெளியை இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது. மேலும் சோதித்து அறியும் அனுபவக் கற்றலுக்கும் இந்தப் பாடத்திட்டம் வாய்ப்பளிக்கிறது. 
இணைய தலைமுறைக்கான வாழ்வியல் திறன்களை உள்ளடக்கிய புதிய கற்றல் வழிமுறைகள், சமூக மாற்றங்கள் மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஏற்ற கருத்தாக்கங்களை உள்ளடக்கி இருப்பது, நுண்ணறிவையும் கவனத்தையும் தூண்டக்கூடிய கற்றல் முறைகள், தொழில் சார்ந்த அணுகுமுறைக்கான கற்றல், இயற்கையோடு இயைந்த புரிந்துணர்வுடன் கூடிய கலந்துரையாடும் செயல்பாடுகள் நிறைந்த கற்றல் தளம் ஆகியவை இப்பாடத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும். 
திருமதி விமலாராணி பிரிட்டோ அவர்கள் பேசும் போது,  குழந்தைகள் அவர்களின் வளர் பருவத்தின் முதல் 5 வயது வரை எதையுமே சொல்லிக் கொடுப்பதால் கற்பதில்லை. பார்ப்பதன் மூலமாகத்தான் கற்றுக் கொள்கிறார்கள். இதைத்தான் ஆய்வுகள் காக்னெட்டிவ் ஸ்கில் என்று கூறுகின்றன. இந்தத் திறன்கள் அடுத்த இரண்டு வருடங்களில் குழந்தைகளிடம் இன்னும் மேம்படுகின்றது. ஆக அவர்கள் வெற்றி பெற்றவர்களாகவோ தோல்வியுற்றவர்களாகவோ நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ உருவாவதில் நம் பங்கு இருக்கிறது. நம் தற்போதைய கல்விமுறையானது குழந்தைகளின் குறைகளை சுட்டிக்காட்டி வளர்க்கும் கல்விமுறை; அவர்களின் திறமைகளை தட்டிக் கொடுத்து வளர்க்கும் கல்விமுறை அல்ல; நாம் குறை சொல்வதற்கு காட்டும் ஆர்வத்தை ஊக்கப்படுத்துவதற்கு காட்டுவதில்லை. ஒவ்வொரு குழந்தைகளுமே தனித்துவமானவர்கள். வேறுவேறு தொலைக்காட்சி சேனல்களில் வேறுவேறுவிதமான நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க விரும்பும் நாம், நம் குழந்தைகள் மட்டும் ஒரே மாதிரியான திறமைகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவது விசித்திரமானது” என்று பேசினார்.
தயாரிப்பாளரான டாக்டர் சேவியர் பிரிட்டோ அவர்கள் பேசும் போது, ”நம்முடைய கல்விமுறையானது இந்த கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பின்னர் வியப்பளிக்கும் வகையில் பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்தின் போது 35 கோடிக்கும் அதிகமான மாணவர்கள், 1.08 கோடிக்கு அதிகமான ஆசிரியர்கள், 15 இலட்சத்திற்கும் அதிகமான பள்ளிகள், 1028 பல்கலைக்கழகங்கள், 49,901 கல்லூரிகள், 10,726 கல்வி நிறுவனங்கள் நம் இந்தியாவில் வகுப்புகளை நடத்த முடியாமலும், வகுப்புகளில் பங்கெடுக்க முடியாமலும் பாதிக்கப்பட்டனர். இனி வரும் காலம் தொழில்நுட்பத்திற்கானது. இனி APP-கள் தான் இந்த உலகை ஆளப் போகின்றன. இது போன்ற தருணத்தில் குழந்தைகளுக்கு புரிந்துணர்வுடன் கூடிய கல்வியை கற்பிக்கும்  முயற்சியில் சேவியர் பிரிட்டோ பள்ளி முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளை எண்ணி பெருமை அடைகிறேன். இவர்கள் உருவாக்கி இருக்கும் இந்த App மிகச்சிறந்த வெற்றி அடையும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. If the education Collapse; the Country Will Collapse என்று சொல்வார்கள். Think Globally; act locally என்பதே இன்றைய கல்விமுறைக்கு தேவையான தாரக மந்திரம் “ என்று பேசினார்.
திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும் போது, ”இது திருமதி விமலாராணி பிரிட்டோ அவர்கள் இரண்டு குழந்தைகளின் தாய், இப்பொழுது மூன்றாவது குழந்தைக்கும் தாயாக மாறி இருக்கிறார்கள். ஆம், இந்த கல்வி மேம்பாட்டிற்கான மென்பொருள் ஆஃப் ஆனது விமலாராணி மூன்று ஆண்டுகள் கருவாக சுமந்து பெற்றெடுத்த குழந்தை. எப்பொழுதுமே பிஸியாக தன்னை வைத்துக் கொள்பவர் விமலாராணி பிரிட்டோ. அவர்களுக்கு என் ஆழமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவரும் பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் பேசும் போது, ஒரு கலைஞனுக்கு அழியாத நினைவுப் பரிசு என்பது மேடையில் போர்த்தப்படும் சால்வைகளோ கொடுக்கப்படும் நினைவுப் பரிசுகளோ அல்ல.. இரசிகர்களாகிய உங்களின் சிரிப்பொலிகளும் கரவொலிகளும் தான். விமலாராணி பிரிட்டோ பேசும் போது ஒரு வார்த்தைக் கூறினார் “வலியில் இருந்து தான் சாதனைகள் தோண்றும்” என்று உண்மைதான். நான் என் குடும்பத்தில் மூன்றாவது குழந்தை எனக்குப் பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்ததும் என் அப்பாவின் மொத்த பாசமும் என் தங்கையை நோக்கி திரும்பிவிட்டது. அப்போதிலிருந்து என் தந்தையின் கவனத்தை கவர்வதற்காக வேறு வேறு குரல்களில் பேசத் துவங்கினேன். அதுவே இன்று என் அடையாளமாகி இருக்கிறது. நானும் புறக்கணிக்கப்பட்ட வலியில் இருந்தே தோன்றியவன். என் பேரக் குழந்தைகள் ஆன்லைனில் பாடம் படிக்கும் போது சிறிது நேரத்திலேயே விளையாடவோ அல்லது டிவியில் ரைம்ஸ் பார்க்கவோ சென்றுவிடுவார்கள். விமலாராணி பிரிட்டோ அவர்கள் சிறுவர்கள் விரும்பும் ரைம்ஸ் மற்றும் விளையாட்டை கலந்தே அவர்களுக்கான பாடங்களை உருவாக்கி இருக்கிறார்கள். இதுவே அவர்களுக்கான முதல் வெற்றி. என் இயற்பியல் வாத்தியார் சில இடங்களில் நீ புரோட்டான் மாதிரி அமைதியாக இரு, இன்னும் சில இடங்களில் எலெக்ட்ரான் போல் எடை குறைவாக இரு, இன்னும் சில இடங்களில் புரோட்டான் போலவும் இல்லாமல் எலெக்ட்ரான் போலவும் இல்லாமல் நியூட்ரலாக இரு” என்று வாழ்க்கைக் கல்வியையும் சேர்த்தே தான் புகட்டினார்கள். FEFDY பாடத்திட்டமும் வாழ்க்கைக் கல்வியையும் சேர்த்தே தான் கற்றுக் கொடுக்கவிருக்கிறது. இந்த முன்னெடுப்பை தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளுக்கும் எடுத்து செல்ல எங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் எடுக்கவிருக்கிறோம்” என்று பேசினார்.
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உயர்திரு மனோ தங்கராஜ் பேசும் போது, ”நம்முடைய கல்விமுறையில் பல மாற்றங்கள் வரவேண்டும் என்று விரும்புபவன் நான். வாழ்க்கை முறைக்கும் நம் கல்விமுறைக்கும் உள்ள வித்தியாசம் தான் என்னை அப்படி யோசிக்க வைக்கிறது. கொரோனா தொற்றுப் பரவலின் போது கைகளை கழுவும்படியும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் படியும் கூட வலியுறுத்த வேண்டிய இடத்தில் தான் தற்போதைய கல்வி நம் மக்களை வைத்திருக்கிறது. ஆன்லைன் கல்வி முறை இப்பொழுது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டதால் இது போன்ற App-களும் தவிர்க்க முடியாதது. ஒரு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நான் பார்த்து வருகிறேன். இன்று செல்போனை தடை செய்தால் இந்த உலகமே அப்படியே நின்றுவிடும். இது போன்ற learning Apps கிராமப்புறம் மற்றும் நகர்புறத்தில் இருக்கும் மாணவர்களுக்கு இடையே உள்ள கற்றல் தொடர்பான இடைவெளியை வெகுவாக குறைக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பணிகள் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை சேவியர் பிரிட்டோ தம்பதியருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.