என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே இருப்பேன் – நடிகர் நாசர்

நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலகப் போவதாக கடந்த சில தினங்களாக செய்தி வந்து கொண்டிருக்கிறது. அந்த செய்தியில், வயதான காரணத்தால் நடிக்க இயலவில்லை என்றும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட மற்றும் அட்வான்ஸ் தொகை பெற்றுக் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருவதாகவும் அது முடிந்தவுடன் நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

பொதுவாகவே நாசர், பெரிய படங்களில் மட்டுமல்லாது முன்னணி நாயகர்கள், பெரிய கதாநாயகர்கள், என்று இல்லாமல் அறிமுக நாயகர்கள், அறிமுக கலைஞர்கள் நடிக்கும் சிறிய பட்ஜெட் படங்களிலும் நடித்து கொண்டே இருப்பவர். சின்ன கலைஞர்கள் என்று பார பட்சம் பார்க்காமல் யார் கேட்டாலும் அது சிறிய கதாபாத்திரமாகவே இருந்தாலும் அதை ஏற்று நடித்து கொண்டிருக்கிறார். இந்தியா முழுவதிலும் அனேக மொழிகளில் நடித்து வரும் நாசரை பற்றி இப்படி ஒரு செய்தி வருவது உண்மை இல்லை என்று அவரே விளக்கம் அளித்துள்ளார்

நாசர் அவர்கள் கூறியிருப்பதாவது :

நான் நடிகனாகத் தான் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட பின், அதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு முறையாகப் பயிற்சி பெற்றுதான் சினிமாவிற்கு வந்தேன்.

மேலும், வலைத்தளங்களில் சமீபமாக வலம் வந்து கொண்டிருக்கும் என் தொழிலிலிருந்து ஓய்வு என்ற செய்தி என்னால் சொல்லப்பட்டது அல்ல; புனைவு. நான் நடித்துக் கொண்டிருப்பேன்; நடிப்பேன். அடையாளம் இல்லாதவர்கள் வலைத்தளங்களில் பதிவிடுவதை விட மக்களால் நம்பப்படுகின்ற நான் மதிக்கின்ற பொறுமையோடும் நட்போடும் பழகுகின்ற ஊடகங்களே அதை வெளியிடுவதுதான் வருத்தமளிக்கிறது. எளிதாக தொடர்பு கொள்ளும் விதத்தில்தான் நான் பழகியிருக்கிறேன். சொந்த விஷயம் ஆகட்டும் தொழில் சார்ந்த விஷயம் ஆகட்டும், சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் அல்லது விளக்கம் இல்லாது தயவு செய்து தவறான பதிவு செய்ய வேண்டாம்.

என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே தான் இருப்பேன்.-நடிகர் நாசர்.