தமிழ்நாடு அழகுக்கலை துறை தொழில் முனைவோர் சங்கம் (TBIEA) சென்னையில் துவக்கம்

நாளுக்கு நாள் நவீனமயமாகி வரும் உலகில் நம் உடலை பராமரிப்பதுபோல் அழகை பேணி காப்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. வெறும் அழகு பராமரிப்பு என்பது மட்டுமின்றி ஒவ்வொருவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் விஷயமாகவும் அது இருக்கிறது. அதற்கு உறுதுணையாக நிற்பவர்கள் தான் அழகுக்கலை நிபுணர்கள்..

அவர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு, தொழில் மேம்பாடு, மேலும் திறமையானவர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல நல்ல நோக்கங்களுக்காக தமிழ்நாடு அழகுக்கலை துறை தொழில் முனைவோர் சங்கம் (TBIEA) மார்ச் 19ஆம் தேதி சென்னையில் நல்ல முறையில் துவங்கப்பட்டது

துவக்க நாளிலேயே இந்த சங்கத்தில் சுமார் 100 உறுப்பினர்கள் வரை இணைந்துள்ளனர். அவர்களுக்கான டிராஃபி, சான்றிதழ் மற்றும் 2000 ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்கள் கொடுத்து சிறப்பிக்கப்பட்டனர். அழகு கலை துறையில் 60 வயது அனுபவம் கொண்ட பிரேமா நரசிம்மன், முத்துலட்சுமி ரவிச்சந்திரன், வசந்தி உள்ளிட்ட பலர் இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நடிகர்கள் பாலா, ஆல்ஃபிரட் ஜோஸ், நடிகைகள் சசி லயா, சாந்தினி மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் ராஜேஷ் போன்ற பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அழகு பொருள்கள் சம்பந்தப்பட்ட பலரும், இவர்கள் தவிர அழகுக்கலை துறையில் ஈடுபட்டுள்ள பல பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் சங்கத்தின் தலைவர் இலங்கேஸ்வரி’ பேசும்போது, “இந்த சங்கத்தின் முக்கிய குறிக்கோள் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வி உள்ளிட்ட பல விஷயங்களை மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்குவது தான். அது மட்டுமல்ல வங்கி கடன் உதவி, அழகு கலை சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு உள்ளிட்டவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதும் இதன் நோக்கம். இந்த அழகுக்கலை துறையில் இருக்கும் பலரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு படிப்பு செலவை இலவசமாகவே ஏற்றுக் கொள்வது, தொழில் தொடங்குவதற்கு பொருளாதார ரீதியாக ஆதரவு தருவது என அடுத்தடுத்து கட்டங்கள் உள்ளன,

திறமையான உறுப்பினர்களை கண்டறிந்து அவர்களை மேடை ஏற்றி கவுரவிப்பதுடன், தேசிய மற்றும் சர்வதேச அளவில் நமது அழகுக்கலை நிபுணர்களை கொண்டு செல்ல இருக்கிறோம். அழகுக்கலை நிலையம் (Beauty Parlor) என்பதையும் தாண்டி தொழில் முனைவோர் என்கிற அடுத்த கட்டத்திற்கு அவர்களை நகர்த்தி செல்வதுதான் சங்கத்தின் முக்கிய குறிக்கோள்.

தற்போது சென்னையில் துவங்கப்பட்டுள்ள இந்த சங்கத்தின் கிளைகள் வெகுவிரைவில் மதுரை, நெல்லை, கோவை, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களின் நகரங்களில் துவங்கப்பட இருக்கிறது. அதை நோக்கிய பயணம் தான் இன்று துவங்கியிருக்கிறது. இதற்கு நிறைய ஆதரவு தற்போது வந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

தலைவர் ; திருமதி இலங்கேஸ்வரி

துணைத் தலைவர்கள் ; திருமதி எம்..சினிமோல் & திருமதி பிரபாவதி

செயலாளர் ; திருமதி தேவி கார்த்திக்

பொருளாளர் ; திருமதி கோமதி

இணை செயலாளர்கள் ; திருமதி கோகில சத்யா & திருமதி ரேணுகா சிவகுமார்

நிர்வாக குழு தலைவர் ; திருமதி சங்கீதா.எஸ்.

Share this:

Exit mobile version