ZEE5 தளத்தில், பிளாக்பஸ்டர் பொலிடிகல் டிராமா ‘பராசக்தி’ வரும் பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராகிறது !!

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகிறது

இந்தியாவின் மிகப் பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொலிடிகல் ஆக்ஷன் டிராமாவான “பராசக்தி” திரைப்படத்தை 2026 பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராக வெளியிடவுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், Dawn Pictures நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தப் படம், தமிழ்நாட்டின் சமூக-அரசியல் வரலாற்றிலிருந்து ஒரு சக்திவாய்ந்த அத்தியாயத்தை திரையில் உயிர்ப்பிக்கிறது.

1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பராசக்தி, அடையாளம், சுயமரியாதை மற்றும் எதிர்ப்புப் போராட்டம் போன்ற கருப்பொருட்களை மையமாகக் கொண்டு, அந்த காலகட்டத்தின் முக்கிய இயக்கத்தில் இழுத்துச் செல்லப்படும் இரண்டு சகோதரர்களின் உணர்ச்சிபூர்வமான கதையை சொல்லுகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடும், கொள்கைநிலையுள்ள இளைஞரான செழியன் என்ற கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

திரைப்படத்தின் பின்னணி குறித்து பகிர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா…,
“மரியாதை, மொழி மற்றும் மக்களின் கூட்டுச் சிந்தனையின் சக்தி குறித்து ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற ஆழமான விருப்பத்திலிருந்து பராசக்தி உருவானது. இது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்ல; ஒருவரின் அடையாளம் கேள்விக்குள்ளாக்கப்படும்போது, சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை இக்கதை பேசுகிறது. நம் குரல்கள், பண்பாடுகள், வரலாறுகள் குறித்து அறிந்து கோள்ள வேண்டிய அவசியத்தை பேசும் இப்படைப்பை, உலகளாவிய பார்வையாளர்களிடம் ZEE5 கொண்டு செல்கிறது என்பது பெரிய மகிழ்ச்சி என்று கூறினார்.

சிவகார்த்திகேயன் கூறுகையில்,
“செழியன் எனக்கு மிகவும் பிடித்த அழுத்தமான, அர்த்தமுமிக்க கதாபாத்திரங்களில் ஒன்று. நம்பிக்கை, துணிவு மற்றும் உண்மையாக முக்கியமான விஷயங்களுக்காக குரல் கொடுப்பதற்கான பொறுப்பு ஆகியவற்றின் பிரதிநிதியாக செழியன் இருக்கிறான். பராசக்தி என்னை ஒரு நடிகராகவும், ஒரு மனிதராகவும் பல சவாலுக்கு உள்ளாக்கியது. இப்போது இந்த பயணத்தை ZEE5 வழியாக பார்வையாளர்கள் அனுபவிக்கவிருக்கிறார்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்,” என்றார்.

ஸ்ரீலீலா கூறுகையில்,
“பராசக்தி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மைல்கல்லாகும். ரத்னமாலா கதாப்பாத்திரம் அமைதியான வலிமையும் கருணையும் கொண்ட கதாபாத்திரம். இவ்வளவு கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கதையின் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு பெருமை. இந்த வேடத்தில் என்னை நம்பிய சுதா மேடம் மற்றும் முழு குழுவுக்கும் என் நன்றி,” என்றார்.

எதிர்ப்பு, சகோதரத்துவம் மற்றும் அடையாளம் குறித்த ஒரு தீவிரமான கதையைக் காண, பராசக்தி திரைப்படத்தை பிப்ரவரி 7 முதல் ZEE5 தளத்தில் காணுங்கள்.

Exit mobile version