புதிய முதல்வராக பொறுப்பேற்கும் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு கேயார் வாழ்த்து!!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவர் தளபதி உயர்திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கும், களம் கண்ட முதல் தேர்தலிலேயே வியத்தகு வித்தியாசத்தில் வாக்குகளை வாங்கி பெரு வெற்றி பெற்றிருக்கும் எங்கள் கலைக் குடும்பத்தை சேர்ந்த படத் தயாரிப்பாளரும் நடிகருமான உயர்திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சுமார் 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்துடன், சட்டமன்ற உறுப்பினராக, வணக்கத்திற்குரிய மேயராக, துணை முதலமைச்சராக என்று பல நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று திறம்பட நடத்தி அனுபவங்களை சேகரித்து இன்று மாண்புமிகு முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் மு க ஸ்டாலின் அவர்களின் வெற்றி வரலாற்று சாதனை என்றால் அது மிகையாகாது.
 முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் புதல்வன்  எடுப்பதைவிட ஸ்டாலினின் தந்தை கலைஞர் என்று சொல்லத் தகுந்த அளவுக்கு மிகுந்த சாதுரியத்துடன் அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தி  வெற்றிக்கனியை பறித்திருக்கிறார். அவருடைய அனுபவ அறிவும் தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்கிற கனவும் நிச்சயமாக நமக்கெல்லாம் ஒரு பொற்கால ஆட்சியாக அமையுமென்று நம்புகிறேன். உதயநிதி ஸ்டாலின் நடிகராக மக்கள் இதயங்களை வென்றெடுத்த இளைஞர். இனி அரசியலிலும் தனது துணிச்சலான புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் நல்ல அரசியல் தலைவராக உருவெடுப்பார் என்று நம்புகிறேன். திரைத்துறையிலும் கோலோச்சிய கலைஞர் பல நன்மைகளை திரைத்துறைக்கு செய்து இருக்கிறார். அதேபோல புதிதாக அமையவிருக்கும் திமுக ஆட்சியில், உதயசூரியன் வரவால் தமிழ் திரையுலகில் படர்ந்திருக்கும் பல சோதனையான வேதனையான இருள் விலகி புத்தொளி பிறக்கும் என்று நம்புகிறேன். ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் வாக்களித்திருக்கும் தமிழக மக்களின் இதயங்களை வெல்லும் ஒரு நிறைவான நிலையான மகிழ்வான ஆட்சி நடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு,
கேயார்,
(பட அதிபர் – இயக்குநர்)
முன்னாள் தலைவர் – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.

Share this:

Exit mobile version